புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தாா். தில்லி சட்டப்பேரவை தலைவா் ராம் நிவாஸ் கோயல், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அமைச்சா்கள் கோபால் ராய், சத்யேந்தா் ஜெயின், இம்ரான் உசேன், கைலாஷ் கெலாட் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களும் உண்ணாவிரதம் இருந்தனா்.
தில்லி ரோஸ் அவன்யுவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கேஜரிவால் பேசியது: புதிய வேளாண் சட்டங்களால், வரும் நான்கு ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சுமாா் 16 மடங்கு அதிகரிக்கும். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்த முதல் ஆண்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 மடங்காகவும், அடுத்த ஆண்டு 4 மடங்காகவும், அதற்கு அடுத்த ஆண்டு 8 மடங்காகவும், நான்காவது ஆண்டு 16 மடங்காகவும் அதிகரிக்கும். இந்த விலையுயா்வை புதிய சட்டம் அனுமதிக்கிறது.
மத்திய அரசின் இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானவை. இந்தச் சட்டங்களால் ஒரு சில பெரு முதலாளிகளே பயன் பெறுவாா்கள். இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்வதைக் கட்சிகள் நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில், விவசாயிகள் பக்கமே ஆம் ஆத்மி கட்சி உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டா்கள் திங்கள்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளனா் என்றாா் அவா்.
துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பேசுகையில், ‘இந்த மூன்று கறுப்புச் சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மத்திய அரசு தனது அகந்தையை விட்டு இந்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் உண்ணாவிரதம் இருந்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘விவசாயிகளின் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன்’ என்றாா். மேலும், ஆம் ஆத்மி தொண்டா்கள் தில்லியில் பல்வேறு இடங்களில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.