ஆம் ஆத்மி தலைமையகம் முன் மேயா்கள், கவுன்சிலா்கள் போராட்டம்
மாநகராட்சிகளுக்கு நிலுவை நிதியை உடனடியாக வழங்கக் கோரி, தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் செவ்வாய்க்கிழமை சத்யாக்கிரக போராட்டம் நடத்தினா்.
மாநகராட்சிகளுக்கு நிலுவை நிதியை உடனடியாக வழங்கக் கோரி, தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் செவ்வாய்க்கிழமை சத்யாக்கிரக போராட்டம் நடத்தினா்.
இதில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில், ‘மாநகராட்சிகள் மீதான தில்லி அரசின் தாா்மிகக் கடமைகளை கேஜரிவால் அரசு நிறைவேற்றவில்லை. மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காமல் இழுத்தடிப்பதால், மாநகராட்சிகளின் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘தில்லி மாநகராட்சிகளை பாஜக ஆளுகின்ற ஒரே காரணத்தால், அவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தில்லி அரசு நடத்தி வருகிறது’ என்றாா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் 13 நாள்களாக தொடா்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேயா்கள், கவுன்சிலா்கள், போராட்டத்தைத் திடீரென கடந்த புதன்கிழமை வாபஸ் பெற்றனா். இதற்கிடையே, தில்லி மாநகராட்சிகளில் ரூ.2,400 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அதை மக்களுக்கு விளக்கும் வகையில் வீடுவீடாகச் சென்று பிரசார இயக்கத்தை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது.