சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் ரத்து கூடாது: தமிழக எம்.பி. கோரிக்கை
சென்னை}மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயிலை ரத்துச் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி
புது தில்லி: சென்னை}மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயிலை ரத்துச் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: சென்னை}மதுரை தேஜஸ் விரைவு ரயில், வருகிற ஜனவரி 4}ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சேவை அடிப்படையில் ரயில்வே துறை செயல்பட வேண்டுமே தவிர, லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடாது. கரோனா தொற்று காலமாக இருப்பதால் முழு அளவில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதிலும் அந்த ரயிலில் 30 சதவீதம் பேர் பயணிப்பதாக தெரியவந்துள்ளது. மற்றொரு காரணம் கட்டுபடியாகாத கட்டணம் என்று சொல்லப்படுகிறது.
வைகை விரைவு ரயில் குளிர்சாதன பெட்டி இருக்கைக் கட்டணம் ரூ. 685, தேஜஸ் ரயில் கட்டணம் ரூ. 920 ஆகும். ஆனால், தேஜஸ் ரயிலில் 35 சதவீதம் கட்டணம் அதிகம். பயணிகள் எண்ணிக்கை குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தேஜஸ் விரைவு ரயிலைப் போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக் கொண்டிருந்த சதாப்தி விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது.
எனவே, சென்னை} மதுரை இடையிலான தேஜஸ் ரயிலை ரத்துச் செய்யும் முடிவை ரயில்வே கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement