முகப்பு
புதுதில்லி

சாத்தான்குளத்தில் சம்பவம்: தமிழக காவல் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறைக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

Updated On : 2 ஜூலை, 2020 at 4:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறைக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் (31) இருவரையும் அப்பகுதி போலீஸார் கொடூரமாகத் தாக்கியதால் படுகாயமடைந்து இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) புதன்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "போலீஸாரின் துன்புறுத்தல் தொடர்பாக தந்தை, மகன் இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக டிஜிபி, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இறப்பு ஆய்வு அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை, மருத்துவ சிகிச்சை ஆவணம், மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தந்தை-மகன் இருவரின் உடல்நலப் பரிசோதனை அறிக்கை ஆகியவை இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.