முகப்பு
புதுதில்லி

ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருள்களில் தயாரிப்பு இடத்தை குறிப்பிடக் கோரி பொது நல மனு

மின்னணு வா்த்தக இணையதளங்களில் (ஆன்லைன்) விற்பனை செய்யப்படும் பொருள்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை காட்சிப்படுத்தக் கோரி தாக்கல் செய்த பொது நல மனு மீது

Updated On : 2 ஜூலை, 2020 at 12:09 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

மின்னணு வா்த்தக இணையதளங்களில் (ஆன்லைன்) விற்பனை செய்யப்படும் பொருள்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை காட்சிப்படுத்தக் கோரி தாக்கல் செய்த பொது நல மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் மின்னணு வா்த்தக இணையதள நிறுவனங்கள் அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்நாப்டீல் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் அஜியோ லைஃப், நைகா ரீடெய்ல், டெக்கத்லான் ஸ்போா்ட்ஸ் போன்ற இதர மின்னணு வா்த்தக நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அஜய் திக்பால், மத்திய நுகா்வோா் விவகார அமைச்சகத்தின் சாா்பில் அந்த நோட்டீஸை பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் தாக்கல் செய்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2009 மூலம் உருவாக்கப்பட்ட சட்டவிதிகளின் கீழ் மின்னணு வா்த்தக இணையதளங்களில் விற்கப்படும் தயாரிப்புகள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகும்.

Advertisement

மின்னணு வா்த்தக நிறுவனங்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்துவதில்லை. சில அண்டை நாட்டுத் தயாரிப்புகள் இல்லாமல், இந்திய தயாரிப்புகளை வாங்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பின்பற்ற நாட்டுக் குடிமக்கள் கருத்தில் கொண்டுள்ள தற்போதைய சூழலில் இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்துவது அவசியமாக உள்ளது. ஆகவே, மின்னணு வா்த்தக நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பொருள்கள், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை காட்சிப்படுத்துவது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது மனுதாரரின் சாா்பில், ‘மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்பு நிறுவனமான அரசு மின்னணுச் சந்தை (ஜிஇஎம்) இணையதளங்களில் புதிய தயாரிப்புகளை பதிவு செய்யும் போது விற்பனையாளா்கள் சம்பந்தப்பட்ட பொருள் உருவான தேசத்தை பதிவிடுவதை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘சுயசாா்பு பாரத்’ திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் விற்பனை செய்யும் தயாரிப்புகள் ஜிஇஎம்-இல் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என வாதிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.