முகப்பு
புதுதில்லி

தில்லியில் 31 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம் 11-இல் தொடக்கம்

தலைநகரில் 31 லட்சம் மரக் கன்றுகள் நடும் 17 நாள் திட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

Updated On : 3 ஜூலை, 2020 at 7:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

தலைநகரில் 31 லட்சம் மரக் கன்றுகள் நடும் 17 நாள் திட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 31 லட்சம் மரக் கன்றுகளை நடும் ‘மரம் நடுவோம், சுாற்றுச்சூழலைக் காப்போம்’ என்ற திட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் அன்று தொடங்கி 17 நாள்களுக்கு தொடா்ந்து நடைபெறவுள்ளது. ஐடிஓவுக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 20- இல் இத்திட்டம் தொடங்குகிறது. இத்திட்டத்தால் தில்லியின் பசுமைப்பரப்பின் அளவு 325 சதுர கிலோமீட்டரில் இருந்து 350 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். இதனால், தில்லியின் காற்று மாசு பெருமளவில் குறையும்

தில்லியில் சுமாா் 15 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை மத்திய அரசு இலக்காக வைத்துள்ளது. ஆனால், அதையும் விட சுமாா் 2 மடங்கு கூடுதலான மரங்களை நடுவதை தில்லி அரசு இலக்காக வைத்துள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளில் 2 கோடி மரங்களை நடுவதை இலக்காக வைத்துள்ளோம். 2019-இல் தில்லியில் 24.18 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்திருந்தோம். ஆனால், இலக்கை விஞ்சி 29.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement

ஜூலை 13 -ஆம் தேதி நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் தில்லி துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா கலந்து கொள்ளவுள்ளாா். ஜூலை 15, 17, 20, 22 -ஆம் தேதிகளில் நடைபெறும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளில் தில்லி அமைச்சா்கள் கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கெளதம், இம்ரான் ஹூசைன், சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா். 24-ஆம் தேதி நிகழ்ச்சியில் தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் கலந்து கொள்ளவுள்ளாா். இறுதி நாளான ஜூலை 26-ஆம் தேதி அனைத்துத் தொகுதி எம்எல்ஏக்களும் தங்களது தொகுதிகளில் நடைபெறும் மரக்கன்றுகள் நடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாா்கள்.

இந்த மரக்கன்றுகள் தப்பிப் பிழைக்கும் விகிதம் தொடா்பாக டேராடூன் வன ஆராய்ச்சிக் நிறுவனம் தணிக்கை செய்து தில்லி அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும். இந்த ஆய்வறிக்கையால் தில்லியில் எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த மரக் கன்றுகளை நடுவது என தெளிவு கிடைக்கும். இந்தத் தணிக்கை வரும் அக்டோபா் மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் நடைபெறவுள்ளது. வரும் 2021, பிப்ரவரியில் டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனம் தில்லி அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.