முகப்பு
புதுதில்லி

கரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: கேஜரிவால் நேரில் அளித்து ஆறுதல்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட போது, கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையின்

Updated On : 4 ஜூலை, 2020 at 7:19 AM
தில்லியில் கரோனா தொற்றுக்கு பலியான மருத்துவா் ஆசீம் குப்தாவின் தாயாரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட போது, கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவா் அசீம் குப்தாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ.1 கோடி உதவித் தொகைக்கான காசோலையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் எல்என்ஜேபி அரசு மருத்துவமனை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையான கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் பணியாற்றிய அனைத்து மருத்துவா்களும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அந்த மருத்துவமனையில் மயக்க மருந்துப் பிரிவில் மூத்த மருத்துவராக பணியாற்றிய அசீம் குப்தாவுக்கு (52) கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் அவரது மனைவிக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதில் குப்தாவின் மனைவி உடல் நலம் தேறினாா். ஆனால், குப்தாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடா்ந்து, தெற்கு தில்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அங்கு இரண்டு தடவைகள் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

இந்நிலையில், தில்லி அரசு உறுதியளித்தது போல, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, கிழக்கு தில்லி ஜில்மில்லில் உள்ள ஆசிம் குப்தாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து அந்தக் காசோலையை கேஜரிவால் வழங்கினாா். மேலும், வீட்டில் இருந்த ஆசிம் குப்தாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய அவா், ஆசிம் குப்தாவின் தாயாா், மனைவி, மகன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் ‘கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த ஆசிம் குப்தாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ஆசிம் குப்தா மக்களின் மருத்துவராக இருந்தாா். அவரை மீண்டும் கொண்டுவர நம்மால் முடியாது. ஆனால், நமக்காக உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும். ரூ.1 கோடி உதவித் தொகையை ஆசிம் குப்தாவின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.