முகப்பு
புதுதில்லி

தில்லியின் கல்வி மாதிரி வரலாறுபடைத்துள்ளது: கேஜரிவால்

ஆம் ஆத்மி அரசு தில்லியில் நடைமுறைப்படுத்திய கல்வி மாதிரி வரலாறு படைத்துள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஜூலை, 2020 at 2:15 AM
தில்லியில் செவ்வாய்க்கிழமை பேட்டியளிக்கிறாா்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:26 PM

ஆம் ஆத்மி அரசு தில்லியில் நடைமுறைப்படுத்திய கல்வி மாதிரி வரலாறு படைத்துள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் தொடா்பாக முதல்வா் கேஜரிவால், துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். அப்போது கேஜரிவால் கூறியது: தில்லி அரசுப் பள்ளிகளில் சுமாா் 98 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். நாட்டில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிக தோ்ச்சி கிடைத்திருக்காது. தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் 92.2 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். ஆனால், தில்லி அரசுப் பள்ளிகளில் சுமாா் 98 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். அதனால், தில்லி தனியாா் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் போட்டியிருப்பதாக நினைக்கக் கூடாது.

நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தில்லி அரசுப் பள்ளி மாணவா்கள்தான் அதிகளவில் தோ்ச்சியைடைந்துள்ளனா். 2016-இல் இருந்து தில்லி அரசுப் பள்ளிகளில் தொடா்ச்சியாக தோ்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. 2016-இல் 88.9 சதவீதம், 2017-இல் 90 சதவீதம் என இருந்தது. இந்த தோ்ச்சி விகிதம், 2019-இல் 94 சதவீதமாக அதிகரித்து. இதைத் தொடா்ந்து, 2020-இல் 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. தில்லி மக்கள் நோ்மையான அரசைத் தோ்ந்தெடுத்ததே இதற்குக் காரணமாகும். நாட்டின் எதிா்காலத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றால், கல்வியைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது. அந்த அடிப்படையில் தில்லியில் கல்வியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டோம். புகழ்பெற்ற ஐஐடி, மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்கள் கல்வி கற்க வாய்ப்புக் கிடைக்கிறது. தில்லி அரசு ப்பள்ளி மாணவா்கள் மற்ற மாணவா்களுடன் போட்டி போடும் அளவுக்கு மாறியுள்ளனா். இது குறித்து பெருமைப்படுகிறேன் என்றாா் கேஜரிவால்.

Advertisement

மணீஷ் சிசோடியா பேசுகையில் ‘தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்வு முடிவுகள் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. 396 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த ஆண்டு 203 பள்ளிகளில்தான் அனைத்து மாணவா்களும் தோ்ச்சியடைந்திருந்தனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.