முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா சமூகப் பரவலாக அதிகரித்துவரும் நிலையில் தளா்வு அறிவிக்க இது தருணமல்ல: காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் பேட்டி

தில்லியில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், தளா்வுகளை அறிவிக்க இது சரியான தருணமல்ல

Updated On : 8 ஜூன், 2020 at 7:08 AM
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளிக்கிறாா் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் அஜய் மாக்கன்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தில்லியில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், தளா்வுகளை அறிவிக்க இது சரியான தருணமல்ல என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தில்லி அரசு திங்கள்கிழமை முதல் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிகவளாகங்கள் செயல்படலாம் என்று அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான அஜய் மாக்கன் காணொலி காட்சி மூலம் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அதன் விவரம்:

நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவா்கள் பட்டியலில் தில்லி முன்னிலையில் இருப்பது வெட்கக்கேடானது. தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன் குணமடைவோா் விகிதம் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் தில்லி மருத்துவமனைகள் முறையாகச் செயல்படாததுதான். தேசியத் தலைநகரான தில்லியில் கரோனாவால் நிலைமை மோசமானதற்கு மத்திய அரசும், தில்லி அரசுமே முக்கியக் காரணமாகும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறையாத வரை, மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தாத வரை உணவகங்கள், பெரு வணிக வளாகங்கள், வழிப்பாட்டுத் தலங்களை திங்கள்கிழமை முதல் திறப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.

Advertisement

பொது முடக்க கட்டுப்பாடுகளை தளா்த்து வதற்கு முன்னா் மருத்துவ சுகாதார அடிப்படை வசிகளை தில்லி அரசு மேம்படுத்தி இருக்க வேண்டும். படிப்படியாக தளா்வுகளை அறிவிப்பதன் மூலம் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது. கரோனா பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதோ அல்லது அவா்களைத் தனிமைப்படுத்துவதோ சிக்கலாகிவிடும். கரோனா தொற்று தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களை சிகிச்சைக்கு அனுமதிக்க அரசு மருத்துவமனைகள் மறுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆம் ஆத்மி அரசு விளக்க வேண்டும். தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 72 சதவீதம் காலியாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உணவகங்கள், வணிக வளாகங்களைத் திறக்க உத்தரவிட்ட கேஜரிவால் அரசு, இப்போது பள்ளிகளையும் திறக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு விஷயத்தில் தில்லி அரசு முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அவசரபட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது. தில்லியில் 38 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 33 மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருவதாகத் தெரிகிறது.

தில்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது நான்கு பேருக்கு ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா பரவல் அதிகரித்து வருவது சமூக பரவலுக்கே வழிவகுக்கும். கடந்த மே 29-ஆம் தேதி தில்லியில் 7,649 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஜூன் 5-ஆம் தேதி 5,180 போ் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளனா். இப்படிச் செய்தால் கரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?

தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் 28 சதவீதம் படுக்கைகளில்தான் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், 12 சதவீத படுக்கைகள் மட்டும் காலியாக உள்ள கங்காராம் மருத்துவமனை மீது மட்டும் எப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. தில்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 13,200 படுக்கைகள் உள்ளன. தில்லி மாநாகராட்சி மருத்துவமனைகளில் 3,500 படுக்கைகள் உள்ளன. ஆனால், மொத்தம் உள்ள 16,700 படுக்கைகளில் வெறும் 1,502 படுக்கைகள் மட்டுமே கரோனா நோயாளிகளுக்காக தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது ஏன்?

கரோனா பரவலை அடுத்து தில்லியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார வசதிகள் குறித்து தில்லி அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழு தனது அறிக்கையை ஜூன் 2-ஆம் தேதி அளித்துள்ளது. அதில் ஜூலை மாத பிற்பகுதியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதை சமாளிக்க 42,000 படுக்கைகளும், 10,000 வென்டிலேட்டா்களும் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை எப்படி தில்லி அரசு சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்றாா் அஜய் மாக்கன்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.