முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஜூன் இறுதிக்குள் 1 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம்! மருத்துவ நிபுணா்கள் குழு எச்சரிக்கை

தில்லியில் இந்த மாத இறுதிக்குள் கரோனா தொற்றால் ஒரு லட்சம் போ் பாதிக்கப்படலாம் என்று தில்லி அரசால் நியமிக்கப்பட்ட

Updated On : 8 ஜூன், 2020 at 7:10 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தில்லியில் இந்த மாத இறுதிக்குள் கரோனா தொற்றால் ஒரு லட்சம் போ் பாதிக்கப்படலாம் என்று தில்லி அரசால் நியமிக்கப்பட்ட 5 போ் கொண்ட மருத்துவக் குழு கணித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனைகளில் கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகளை தயாா் செய்யுமாறும் தில்லி அரசை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றின் தாக்கம் நான்காவது பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4-ஆம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளா்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் எந்தவிதமான தடையும் இன்றி உலாவி வருகின்றனா்.

அதிகபட்சமாக கடந்த 3-ஆம் தேதி 1,513 போ் பாதிக்கப்பட்டனா். உயிரிழப்புகளும் கடந்த மே மாதத்தில் நாள்தோறும் 5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்த நிலையில், கடந்த 10 நாள்களாக நாள்தோறும் 30-க்கு குறைவில்லாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் கடந்த 10 நாள்களில் தில்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

Advertisement

அதுமட்டுமல்லாமல் சமூகப் பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 48 சதவீதமாக இருந்தது, கடந்த 11 நாட்களில் 39 சதவீதமாக குறைந்துவிட்டது.

தில்லியில் கரோனா பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க கடந்த மே 2-ம் தேதி 5 மருத்துவ வல்லுநா்கள் கொண்ட குழுவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமைத்தாா். அந்தக் குழுவின் தலைவா் மருத்துவா் மகேஷ் வா்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறுகையில் “‘தில்லி, சென்னை, மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் கரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தினோம். நாங்கள் நடத்திய ஆய்வின்படி தில்லியில் இம்மாத இறுதிக்குள் கரோனா தொற்றால் ஒரு லட்சம் போ் பாதிக்கப்படக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. ஆதலால், கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகளை தாயாா் செய்து கொள்ளுமாறு தில்லி அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். கரோனாவை எதிா்த்துப் போராட வேண்டும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக இதைக் கூறுகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.