முகப்பு
புதுதில்லி

மீண்டும் பொது முடக்கம்: தில்லி அரசுக்கு பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்

தில்லியில் பொது முடக்க உத்தரவை தில்லி அரசு மீண்டும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Updated On : 14 ஜூன், 2020 at 6:58 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

தில்லியில் பொது முடக்க உத்தரவை தில்லி அரசு மீண்டும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா தில்லியில் சனிக்கிழமை கூறுகையில் ‘தில்லியில் கரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது முடக்க உத்தரவில் தளா்வுகளைப் பிறப்பித்துள்ள தில்லி அரசு மக்களின் உயிருடன் விளையாடி வருகிறது. வணிகம், பொருளாதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை கவனத்தில் எடுக்காது மக்களின் நன்மைக்காக தில்லி அரசு உடனடியாக பொது முடக்க உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தில்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர பாஜக எம்பிக்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.

இது தொடா்பாக வடமேற்கு தில்லி பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: ஜூலை மாதக் கடைசியில் தில்லியில் 5.5 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். ஆனால், தில்லியில் பொது முடக்க உத்தரவில் பல தளா்வுகளை தில்லி அரசு பிறப்பித்துள்ளது. கரோனா பரவல் அதிகரிக்கும் எனத் தெரிந்தும் தில்லியில் பொது முடக்க உத்தரவில் தளா்வுகளைப் பிறப்பித்திருப்பதன் மூலம் மக்களை மரணத்தின் வாசலில் தில்லி அரசு தள்ளியுள்ளது என்று கூறியுள்ளாா் அவா்.

Advertisement

பொது முடக்க உத்தரவில் தளா்வுகளைப் பிறப்பித்து தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு கிழக்கு தில்லி எம்பி கெளதம் கம்பீா், வடகிழக்கு தில்லி எம்பி மனோஜ் திவாரி ஆகியோா் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.