முகப்பு
புதுதில்லி

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம்: செப்டம்பரில் இறுதி விசாரணை

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட

Updated On : 20 ஜூன், 2020 at 7:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது செப்டம்பரில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழகத்தில் 2008-இல் திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காவிட்டால் 6 மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து 2014, செப்டம்பா் 23-இல் உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி 21 போ் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த ஆா்.தன்ராஜ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘தற்போது கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மனுதாரா்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. ஆகவே, வாழ்வாதார நிதி உதவியை வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் த்விவேதி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோரும், எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் நாகமுத்து, வில்சன் மற்றும் வழக்குரைஞா்கள் நந்தகுமாா், குமணன், ராஜராஜன் உள்ளிட்டோா்ஆஜராகினா்.

எதிா்மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘மக்கள் நலப் பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. பணியிழப்பு காரணமாக நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும் மனுதாரா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, உயா்நீதிமன்றத்தின்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைகாலத் தடையை நீக்க வேண்டும். மேலும், கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நலப் பணியாளா்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் நலப் பணியாளா்கள் தொடா்புடைய மேல்முறையீட்டு வழக்கில் இறுதிவாதத்தை நடத்த வேண்டும் ’ என்று கேட்டுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரும் மனுவை நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது.எனினும், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதம் செப்டம்பரில் உரிய அமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.