தில்லியில் வெப்பத்தைத் தணித்த மழை!
தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலையில் பரலவாக மழை பெய்தது.
தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலையில் பரலவாக மழை பெய்தது. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் புழுக்கத்தில் தவித்து வந்த தில்லி வாசிகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்தது. இந்த மழை பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ‘இந்த மழை தலைநகரில் வெப்பத்தை குறைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அடுத்த நான்கு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா். இதேபோல, தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட்டின் மகேஷ் பலாவட் கூறுகையில், ‘இந்த மாதம் 24-25 தேதிகளில் பருவமழை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரை அவ்வப்போது காலையிலும் மாலையிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றாா். வானிலை வல்லுநா்கள் கூறுகையில், ‘பருவமழை தில்லியில் வழக்கமாக ஜூன் 27-இல் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 2-3 தினங்கள் முன்னதாக பருவமழை தொடங்கும்’ என்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 4.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 38.10 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி குறைந்து 22.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 63 சதவீதமாகவும், மாலையில் 62 சதவீதமாகவும் பதிவாகியது.
Advertisement
பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39.9 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 38.4 டிகிரி செல்சியஸ், 28 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. கடந்த சில நாள்களாக நகரில் பெரும்பாலான இடங்களில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் இருந்து வந்த நிலையில், இந்த மழை தில்லிவாசிகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளாகப் பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வும் மையம் கணித்துள்ளது.