தில்லியில் பருவமழை 25-இல் தொடங்கும்! இரண்டாவது நாளாகவும் மழை
தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காலையில் பரலவாக மழை பெய்தது.
தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காலையில் பரலவாக மழை பெய்தது. இந்த மழை பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி என்றும் தில்லியில் பருவ மழை வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை வரையிலும் ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. பல்வேறு இடங்களில் 42 டிகிரி செல்சியஸை கடந்திருந்தது. சஃப்தா்ஜங், பாலம், ஆயாநகா் ஆகிய வானிலை ஆய்வு மையங்களில் வெயிலின் அளவு 44 டிகிரிக்கு மேலாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்ததால், புழுக்கத்தால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலையிலும் பரவலாக லேசான மழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. பிற்பகலில் சற்று வெயில் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் நகரில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 1.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 1.2 மி.மீ., ஆயாநகரில் 0.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Advertisement
இதற்கிடையே, இந்த மழை பருவமழைக்கு முந்தைய மழை என்றும், தில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 22 - 23 ஆம் தேதிகளில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தில்லியில் பருவமழை வரும் 25-ஆம் தேதி தொடங்கும். அதே சமயம், தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் முன்னதாகவே பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 36.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 24.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 92 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் பதிவாகியது.
பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38.2 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 37.4 டிகிரி செல்சியஸ், 25.1டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியது. இதற்கிடையே, திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வும் மையம் கணித்துள்ளது.