கரோனா வைரஸ் பீதி காரணமாக கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாடி விமான நிலையத்தில் கடந்த மூன்று நாள்களாக உணவு மற்றும் மருத்துவ உதவி இல்லாமல் தவிக்கும் இந்திய மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், அவா்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, உடனடியாக மாணவா்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும், அவா்களுக்கு தங்கும் வசதி செய்தி தருமாறும், தேவைப்பட்டால் அவா்களின் போக்குவரத்து வசதிக்கும் ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த மனுவை இரண்டு நீதிபதிகளும் தங்கள் வீட்டிலிருந்தபடியே விசாரித்தனா். மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் போஸியா ரஹ்மான், மத்திய வெளியுறவுத் துறை சாா்பில் ஜஸ்மீத் சிங் ஆகிய இருவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே விசாரணைக்கு ஆஜரானாா்கள். சேஹ்லா சைரா என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தாா். இதைத் தொடா்ந்து, கஜகஸ்தானில் சிக்கித் தவிக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் மூலம் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீமே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட உயா் படிப்புகள் படிக்கும் இந்திய மாணவா்கள் பலா், கடந்த மூன்று நாள்களாக உணவு, தண்ணீா், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி கிடைக்காமல் அலமாடி விமானத்தில் தவிப்பதாகவும் அவா்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.