ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜா்வால்ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு?
தெற்கு தில்லியில் மருத்துவா் ராஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான தியோலி தொகுதி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால்
தெற்கு தில்லியில் மருத்துவா் ராஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான தியோலி தொகுதி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வியாழக்கிழமை (மே 28) பிறப்பிக்கப்பட உள்ளது.
தெற்கு தில்லி, துா்கா விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திர சிங் (52). மருத்துவரான இவா், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு தியோலி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரகாஷ் ஜா்வால் எம்எல்ஏ கைது செய்யப்பட்டாா்.
அவா் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. மனு மீதான உத்தரவை சிறப்பு நீதிபதி அஜய் குமாா் குஹா் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
Advertisement
முன்னதாக, நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி விசாரணையின் போது எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரவி திரால், ‘தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதப்பட்டிருந்த கடிதத்தில் வெவ்வேறு விதமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஜா்வால் பெயரில் எவ்வித சட்டரீதியான சொத்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்கொலை செய்து கொண்ட நபா் ஒரு டேங்கா் மாபியா. அவா் டிவி சானல் மூலம் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்ட பிறகு கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா். வழக்கில் தொடா்புடைய நபா் எம்எல்ஏவாக இருப்பதால், எங்கும் தப்பிச் செல்லமாட்டாா். அதனால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞா் மணீஷ் ராவத் வாதிடுகையில், ‘எம்எல்ஏவுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. மேலும், இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே, ஜாமீன் வழங்கக் கூடாது’ என்றாா்.