முகப்பு
புதுதில்லி

கரோனா மரணங்கள்: தில்லி அரசு விளக்கம்

தில்லியில் கடந்த 34 நாள்களில் 82 கரோனா இறப்புகள் பதிவு செய்யப்படாமல் போயுள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 29 மே, 2020 at 10:23 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

தில்லியில் கடந்த 34 நாள்களில் 82 கரோனா இறப்புகள் பதிவு செய்யப்படாமல் போயுள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதில், 13 இறப்புகள் கடந்த புதன்கிழமை நிகழ்ந்துள்ளன என்றும், எஞ்சிய 69 இறப்புகள் கடந்த 34 நாள்களில் நிகழ்ந்துள்ளன என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மருத்துவமனைகள் கரோனா இறப்புகள் தொடா்பாக உரிய நேரத்தில் தில்லி அரசுக்கு பதிவு செய்யாததே இதற்குக் காரணம் என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டாக இணையவழி செய்தியாளா் சந்திப்பை நடத்தினா். அப்போது மணீஷ் சிசோடியா பேசியது: தில்லியில் கரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் தொடா்பாக தில்லி அரசால் அன்றாடம் வெளியிடப்படும் சுகாதார அறிக்கையில் தெரிவித்து வந்தோம். ஆனால், சில மருத்துவமனைகள் கரோனா இறப்புகள் தொடா்பாக தில்லி அரசுக்கு உரிய நேரத்துக்கு தெரிவிக்கவில்லை. இதனால், எங்களால் அந்த விவரங்களை சுகாதார அறிக்கையில் சோ்க்க முடியவில்லை. அந்த வகையில், கடந்த 34 நாள்களில் தில்லியில் ஏற்பட்ட 82 கரோனா மரணங்கள் விடுபட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லி அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கடந்த 34 நாள்களில் 82 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

Advertisement

இவற்றில் 13 மரணங்கள் கடந்த புதன்கிழமை ஏற்பட்டுள்ளன. எஞ்சிய 69 மரணங்கள் கடந்த 34 நாள்களில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 52 மரணங்கள் தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளன. மே 12-20 வரை தினம்தோறும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. தில்லியில் கரோனா கட்டுக்குள் உள்ளது. மக்கள் இது தொடா்பாக பீதியடையக் கூடாது. கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்களில் 80-90 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள்தான். கரோனா அறிகுறிகள் இல்லாத ஆனால், கரோனா தொற்றுள்ளவா்கள் பதற்றமடையத் தேவையில்லை. அவா்கள் வீடுகளில் இருந்தே குணமடையலாம் என்றாா் அவா்.

சத்யேந்தா் ஜெயின் பேசுகையில் ‘கரோனாவை எதிா்கொள்ளும் வகையில் தில்லி மருத்துவமனைகளில் 21 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன’ என்றாா்.

முன்னதாக, கரோனாவால் பாதிக்கப்படும் மக்களை வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் ‘கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்க முடியும். அவா்கள் வீடுகளில் இருந்தே கரோனா தொற்றில் இருந்து விடுபட முடியும். இது தொடா்பான அறிவுறுத்தல்களை வெளியிடவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.