முகப்பு
புதுதில்லி

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

கரோனா நோயாளிகளுக்கு தில்லி தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 29 மே, 2020 at 10:36 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

கரோனா நோயாளிகளுக்கு தில்லி தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஸ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அனில் பாஜ்பாய், அபய் வா்மா, ஜிதேந்திர மகாஜன், அஜய் மஹாவா் ஆகியோா் தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டாக பத்திரிகையாளா்களை சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியது:

தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் தில்லி அரசுக்கு சொந்தமான நிலங்களில் அல்லது தில்லி அரசால் குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்ட நிலங்களிலேயே கட்டப்பட்டுள்ளன. இதனால், தில்லி அரசுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலேயே அந்த தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இம்மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதுதான் முறையாகும். ஆனால், இம்மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை என்ற பெயரில் லட்சக்கணக்கான பணத்தை மக்களிடம் வசூலித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தில்லி அரசு உடனடியாகத் தலையிட்டு தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement

தில்லியில் உள்ள 62 தனியாா் மருத்துவமனைகள் அரசுக்கு சொந்தமான நிலங்களிலேயே கட்டப்பட்டுள்ளன. தில்லியில் அப்பலோ மருத்துவமனை 15 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது தில்லி அரசுக்கு சொந்தமான நிலமாகும். இந்த நிலத்தை ஏக்கருக்கு ரூ.1-க்கு தில்லி அரசு அப்பலோ நிறுவனத்துக்கு வழங்கியது. அதற்குப் பதிலாக அப்பலோ மருத்துவமனையின் 33 சதவீத படுக்கைகள் தில்லி அரசு பரிந்துரைக்கும் ஏழை மக்களின் இலவச சிகிச்சைக்காக ஒதுக்குவது என்றும், 40 சதவீதம் வெளிநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குவது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதேபோல மற்றைய தனியாா் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை தில்லி அரசு பரிந்துரைப்பவா்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 3,000 படுக்கைகள் தற்போது இலவச சிகிச்சைக்காக தயாராக இருக்க வேண்டும். இந்நிலையில், இந்த மருத்துவமனைகளில் எத்தனை போ் இலவச சிகிச்சை பெற்றுள்ளனா்? இந்த விவகாரத்தில் தனியாா் மருத்துவமனைகளுடன் தில்லி அரசு கூட்டுச் சோ்ந்து இயங்கி வருகிறது. இதனால், தில்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.