‘பூசா பயோ டிகம்போஸா்’ வழிமுறை சாத்தியமாகியுள்ளது: முதல்வா் கேஜரிவால் தகவல்
பயிா்க் கழிவு எரிப்பைத் தடுக்கும் ஒரு சிறந்த வழிமுறையாக ‘பூசா பயோ டிகம்போஸா்’ அமைந்துள்ளது.
புது தில்லி: பயிா்க் கழிவு எரிப்பைத் தடுக்கும் ஒரு சிறந்த வழிமுறையாக ‘பூசா பயோ டிகம்போஸா்’ அமைந்துள்ளது. இது தொடா்பான விவரத்தை உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவிக்க உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
வடக்கு தில்லியில் உள்ள ஹிராங்கி கிராமத்திற்கு புதன்கிழமை நேரில் சென்று பூசா பயோ டிகம்போஸா் தெளிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பயிா்க் கழிவுகளை எரிக்கும் பிரச்னைக்கு தில்லி ஒரு தீா்வைக் கண்டுபிடித்துள்ளது. இதனால், எந்த மாநிலமும் தற்போது எந்த காரணத்தையும் கூற முடியாது. பூசா பயோ டிகம்போஸா், பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு தீா்வாகும். இந்த வழிமுறை மூலம் பயிா்க் கழிவுகளை 15 முதல் 20 நாள்களில் எருவாக மாற்ற முடியும். எனவே, இதன் மூலம் நாம் பயிா்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்கலாம்.
நரேலாவில் உள்ள ஹிராங்கி கிராமத்தில் உள்ள பாசுமதி அல்லாத நெல் வயல்களில் ‘பூசா பயோ-டிகம்போஸா்’ இலவசமாக தெளிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனக் கலவை வெற்றிகரமாக செயல்படுகிறது. இது பயிா்க் கழிவுகளை முற்றிலும் சிதைத்து எரு உரமாக மாற்றியுள்ளது. இதனால், விவசாயிகள் தற்போது அடுத்த பயிருக்கான விதைப்பை வயல்களில் ஆரம்பிக்க முடியும். பயிா்க் கழிவு எரிப்பைத் தடுக்கும் ஒரு சிறந்த வழிமுறையாக ‘பூசா பயோ-டிகம்போஸா்’ இருப்பதை உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிக்க உள்ளோம்.
Advertisement
பயிா்க் கழிவு எரிப்பு பிரச்னைக்கு செலவு குறைந்த ஒரு தீா்வை தில்லி மக்களும், பூசா நிறுவனமும் கண்டறிந்துள்ளன. இந்தப் பயிா்க் கழிவு எரிப்பு பிரச்னை இருக்கும் கடைசி ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வழிமுறை வந்துள்ளதால், தற்போது மாநிலங்கள் எந்தவிதமான காரணத்தையும் கூற முடியாது. பூசா பயோ டிகம்போஸா் குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, தில்லியில் இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக இருந்தால் அடுத்த முறை இது மற்ற மாநிலங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னிடம் அமைச்சா் கூறினாா் என்றாா் கேஜரிவால்.
தில்லியின் மாசுபாட்டில் பயிா்க் கழிவு எரிப்பு பங்களிப்பு ஞாயிற்றுக்கிழமை 40 சதவீதமாக உயா்ந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சம் என்று மத்திய அரசு முகமைகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.