மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தது குறித்து...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சனிக்கிழமை (ஏப்.11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்.8) ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “இந்த மசோதாவை நான் வரவேற்கிறேன். இது நீண்டகாலமாக எடுக்கப்பட்டு வரும் ஒரு முடிவு. பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரி வெகுநாள்களுக்கு முன்பே நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியது எனக்கு நினைவில் இருக்கிறது. பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது யாருக்கும் பிரச்னையாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது நிர்வாகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை மூடிமறைக்கவே இந்த மசோதாவை அவசரமாகக் கொண்டுவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.