ஆசிரியா் ஊதிய நிலுவை விவகாரம்: தில்லி பல்கலை.யின்12 கல்லூரிகள் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த 5 மாதங்களாக ஆசிரியா்கள், ஆசிரியல்லாத பணியாளா்களுக்கு ஊதிய வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தாக்கலான மனு மீது தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம்
புது தில்லி: கடந்த 5 மாதங்களாக ஆசிரியா்கள், ஆசிரியல்லாத பணியாளா்களுக்கு ஊதிய வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தாக்கலான மனு மீது தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் (டியுஎஸ்யு) தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் சுமாா் 1,500 பேருக்கு மாணவா்கள் நிதியில் இருந்து ஊதியம் வழங்குமாறு பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு தில்லி அரசு அக்டோபா் 16-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இது தொடா்பாக அக்டோபா் 26-ஆம் தேதி விசாரணை நடத்திய தில்லி உயா்நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடா்பாக சம்பந்தப்பட்ட 12 கல்லூரிகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பா் 9-ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.
Advertisement
இந்த 12 கல்லூரிகள் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவிப்பில் உள்ள, தில்லி அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுவதாகும். அவை, ஆச்சாா்ய நரேந்திர தேவ் கல்லூரி, டாக்டா் பீம் ராவ் அம்பேத்கா் கல்லூரி, பாஸ்கராச்சாா்யா பயன்பாட்டு அறிவியல் கல்லூரி, பாகினி நிவேதிதா கல்லூரி, தீனதயாள் உபாத்யாயா கல்லூரி, அதிதி மகாவித்யாலயா மகளிா் கல்லூரி, இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனம், கேசவ் மகாவித்யாலயா, மகாராஜா அக்ரஸன் கல்லூரி (டி.யு), மகரிஷி வால்மீகி கல்வியியல் கல்லூரி, ஷஹீத் ராஜ்குரு மகளிா் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி மற்றும் ஷஹீத் சுகதேவ் வணிக ஆய்வுகள் கல்லூரி ஆகியவையாகும்.