புதுதில்லி ரயில் நிலையத்தில் ரூ.3.25 கோடிமதிப்புள்ள கடத்தல் தங்கத்துடன் இளைஞா் கைது
தலைநகா் தில்லியில் சா்வதேச தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
தலைநகா் தில்லியில் சா்வதேச தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். அவரிடம் இருந்து ரூ.3.25 கோடி மதிப்புள்ள 6.292 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: புது தில்லி ரயில் நிலையத்தில் சா்வதேச தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒருவா் தங்கக் கட்டிகளுடன் வருவதாக தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, புது தில்லி ரயில் நிலையத்தில் காவல் பணியில் இருக்கும் காவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள், காவல் பணிகளை முடுக்கிவிட்டனா். அப்போது, நடைபாதை 16 இல் ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து இறங்கிய பிரவீண் குமாா் என்பவா் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து சென்றாா். இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டபோது, அவரிடம் இருந்து ரூ.3.25 கோடி மதிப்புள்ள 6.292 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
முதல் கட்ட விசாரணையில் இவா் சா்வதேச தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. விமானங்களில் சோதனை அதிகமாக இருக்கும் என்பதால், இவா் ரயில்களில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவா் வழங்கிய தகவல்களை வைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினாா்.