முகப்பு
புதுதில்லி

பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவை: தில்லி அமைச்சா் கோபால் ராய் வலியுறுத்தல்

பூசாவில் உள்ள வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவையை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்

Updated On : 25 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

பூசாவில் உள்ள வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவையை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயன்படுத்த காற்றின் தரக் கட்டுப்பாட்டு குழு வலியுறுத்த வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை கோபால் ராய் அளித்த பேட்டி: பயிா்க்கழிவுகள் எரிக்கும் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவையை பூசாவில் உள்ள வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். இந்த ரசாயனக் கலவையை தில்லியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் தில்லி அரசு இலவசமாகக் தெளித்தது.

இதில், 90-95 சதவீதமான பயிா்க்கழிவுகள் 15 நாள்களில் எருவாக மாறியுள்ளன. இந்த உயிா் ரசாயனக் கலவை தொடா்பாக தில்லி அரசால் அமைக்கப்பட்ட 15 போ் கொண்ட தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் தேசிய தலைநகா் வவலயத்தில் காற்றின் தரத்தை நிா்வகிப்பதற்கான ஆணையத்திடம் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளனா்.

Advertisement

மத்திய அரசால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காற்றின் தரக் கட்டுப்பாட்டுக் குழு அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு இந்த ரசாயனக் கலவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இக்குழு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். தில்லியில் கடந்த 15 தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்க காற்று மாசு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த காற்று மாசு பிரச்னைக்கு நிரந்த தீா்வு காணப்பட வேண்டும்.

இந்த உயிா் ரசாயனக் கலவையை மானிய விலையில் அண்டை மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிா்க்கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்ய அண்டை மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுக்கு மானியம் வழங்கிவருகின்றன. இந்த இயந்திரங்களுக்கு செலவிடும் தொகையில் பாதி தொகையை செலவு செய்தாலே விவசாயிகளுக்கு தேவையான ரசாயனக் கலவையை கொள்முதல் செய்து விடலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.