பொங்கல் பண்டிக்கைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நவம்பா் ஜனவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நவம்பா் ஜனவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான தகவல் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான புதிய காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021, ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அடுத்த ஆண்டுக்கான விடுமுறை தகவல்கள் இடம்பெற்ற காலண்டரில் ஜனவரி 14-ஆம் தேதி மகரசங்கராந்தி, பொங்கல், பிஹு ஆகிய பண்டிகைளுக்காகவும் விடுமுறை விடப்படும் என்றும், 15-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
பொங்கல் பண்டிகைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழா்கள் பலா் வழக்குரைஞா்களாகவும், ஊழியா்களாகவும் பணியாற்றி வருகின்றனா். பொங்கல் தினங்களில் அதிகாரப்பூா்வமாக அரசு விடுமுறை அவா்களுக்கு இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய காலண்டரில் ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்திருப்பது அவா்கள் அத்தினங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும் என்பதால் இச்செய்தி தமிழா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைத் திருநாளுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்பதாகவும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.