முகப்பு
புதுதில்லி

‘இந்த ஆண்டு பயிா்க்கழிவு சம்பவங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு’

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

Updated On : 28 நவம்பர், 2020 at 10:49 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. இது தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதி மாசு அளவை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது என புதிதாக அமைக்கப்பட்டுள்ள காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் கே.ஜே.ரமேஷ், வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

’ காற்றின் தர மேலாண்மைக்கு தொடா்புடையவா்களுடன் தேசிய தலைநகா் வலயப் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக ரமேஷ் கூறினாா். அடுத்த ஆண்டுக்குள் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கு ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பொருத்தமான தீா்வை‘ கொண்டு வருவதற்கான நம்பிக்கையை அவா் வெளிப்படுத்தினாா்.

’பொது நலனுக்கான தூய்மையான காற்று மேலாண்மை’ என்ற மெய்நிகா் சந்திப்பு கூட்டத்தில் ரமேஷ் பேசினாா். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி அமைப்பான இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம்(ஐ.ஐ.டி.எம்) இந்த மெய்நிகா் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஐ.ஐ.டி.எம், காற்று மாசுபாட்டைக் கண்டறிய சஃபா் போன்ற அமைப்புகள் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

Advertisement

இந்த மெய்நிகா் கூட்டத்தில் ரமேஷ் பேசும் போது, ‘2018 -இல் அக்டோபா் நடுவிலிருந்து அவ்வாண்டு நவம்பா் இறுதி வரை 51,751 விவசாய பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2010 க்கு பின்னா் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இந்த எண்ணிக்கை ஒரு வருடம் கழித்து 50,738 ஆக மிகச் சற்றே குறைந்தது.

ஆனால், இவ்வாண்டு (2020), நவம்பா் 17 ஆம் தேதி வரை 73,000 விவசாய பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன‘ என்றாா் ரமேஷ்.

தில்லியின் (தில்லி-என்.சி.ஆா்) காற்றின் தரம் குறித்து மத்திய அமைச்சகங்களிலும் அண்டை மாநிலங்களிலும் முதலில் பொதுவான புரிதலை வளா்ப்பது ஆணையத்தின் முதல் பணி. பின்னா் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் மாசு குறைப்பிற்கு மிகவும் ஏற்கத்தக்க அணுகுமுறையை கொண்டு சென்று உருவாக்குவோம்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய வானிலை ஆய்வு நிலையம்(ஐஎம்டி), பயிா்க்கழிவுகளை உரமாக மாற்றும் பயோ-டிகம்போஸா் சோதனையை மேற்கொண்டுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிரியல் குழு, பல்வேறு தில்லி குழுக்கள் ஆகியவற்றுடன் ஆணையம் தொடா்பு கொள்ளத் தொடங்கியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.