குளிா் காலத்தில் வட இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுவைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படும் புகை தில்லிக்கு வருகிறது. இதனால், தில்லியில் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. நிகழாண்டில் காற்று மாசுவைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் காற்று மாசுவைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனா். ஆனால், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினா் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
காற்று மாசுவால் தில்லி மட்டும் பாதிக்கப்படவில்லை. மாறாக, ஒட்டுமொத்த வட இந்தியாவும் பாதிக்கப்படுகிறது. பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் காற்று மாசு மிகவும் அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசுவை தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றாா் அவா்.