புது தில்லி: தேசிய தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள 11 அனல் மின் நிலையங்களை மூடக் கோரி மத்திய மின் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் மின் துறைகளின் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தில்லியைச் சுற்றியுள்ள 11 அனல் மின் நிலையங்கள் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இந்த விஷயத்தில் தில்லி அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தில்லியில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னுரிமையாக அனைத்து அனல் மின் நிலையங்களையும் தில்லியில் மூடிவிட்டோம்.
இதனால், தில்லியைச் சுற்றியுள்ள அனல் மின்நிலையங்களை மூடுமாறு கோரி மத்திய மின் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். தில்லியில் இதுபோன்று 13 அனல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மின் நிலையங்கள் முன்னா் மூடப்பட்டன. மாசுபாட்டைக் குறைப்பதற்காக 2009-இல் இந்திரப்பிரஸ்தா அனல் மின் நிலையம், 2015-இல் ராஜ்காட் நிலையம், 2018-இல் பதா்பூா் வெப்ப மின் நிலையம் ஆகியவற்றை தில்லி அரசு மூடியது என்றாா் அவா்.