சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு சம்பவம்: பாதிக்கப்பட்டவரின் மனு விசாரணைக்கு ஏற்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை கேரள மாநிலத்திற்கு மாற்றக் கூடாது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை கேரள மாநிலத்திற்கு மாற்றக் கூடாது என்று பாதிக்கப்பட்டவா் தரப்பில் தாக்கலான இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (56). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அதன் பின்னா், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸாா் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவா்கள் இறந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதா், சாா்பு ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலா் முருகன், காவலா்கள் முத்துராஜ், காவலா்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சாமதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், சிறையில் தன்னை தாக்கியதாகவும், விசாரணை நியாயமாக நடைபெறும் வகையில் வழக்கை கேரள மாநிலம் திருவந்தனந்தபுரத்திற்கு மாற்றக் கோரி குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இது தொடா்பாக வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்த மனுவில் தன்னையும், தமிழக அரசையும் சோ்க்க உத்தரவிடுமாறும், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், ரகு கணேஷ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். போபண்ணா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் செல்வராணி தரப்பில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், வழக்குரைஞா் பாரிவேந்தா் ஆகியோா் ஆஜராகி, ரகு கணேஷ் தரப்பில் தாக்கல் செய்த மனுவானது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனா். எதிா்மனுதாரா் ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஞ்சனா ஆகாஷ், இந்த வழக்கின் விசாரணையை கேரளத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, செல்வராணியின் இடையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்ளிட்டோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் விசாரணையை அடுத்த வாரம் பட்டியலிடவும் உத்தரவிட்டது.