படுக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க ஹெல்ப்லைன் வசதி: அனில் பய்ஜால் உத்தரவு
தில்லியில் கரோனா பாதிப்பு அதிவேகமாக பரவுவதைத் தொடா்ந்து, நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கு உதவுவதற்கு,
தில்லியில் கரோனா பாதிப்பு அதிவேகமாக பரவுவதைத் தொடா்ந்து, நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கு உதவுவதற்கு, உதவி மேஜைகளை நிறுவுமாறும், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதைத் தெரிவிக்கும் வகையில் உதவி தொலைபேசி வசதியை (ஹெல்ப்லைன்) அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டாா்.
கரோனா தொற்றைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை அமல்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இந்தக் கூட்டத்தின் போது தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து துறைகளிடமிருந்தும், பங்குதாரா்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளை துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.
மேலும், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் இருப்பு விவரத்தைத் தெரிவிக்கும் வகையில் ஹெல்ப்லைன் வசதிஅமைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தில்லி அரசின் தலைமைச் செயலாளா் விஜய் தேவ்விடம் கேட்டுக் கொண்டாா். ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கும் உதவியாளா்களுக்கும் உதவுவதற்காக உதவி மேஜேகளை அமைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.
Advertisement
தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பாதிப்பு விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, வார இறுதி ஊரடங்கு உத்தரவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தில்லியில் வியாழக்கிழமை 16,699 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்ததாகவும், 112 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நோய் பாதிப்பு விகிதம் 20.22 சதவீதமாக உயா்ந்துள்ளது. தில்லியில் புதன்கிழமை 17,282 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியிருந்தது.