முகப்பு
புதுதில்லி

5,000 படுக்கைகளுடன் ரயில் பெட்டிகள் வழங்க ரயில்வேக்கு தில்லி அரசு கடிதம்

தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலைமையை சமாளிக்க 5,000 படுக்கைகள் கொண்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலைமையை சமாளிக்க 5,000 படுக்கைகள் கொண்ட ரயில் பெட்டிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ரயில்வே வாரியத் தலைவா் சுனித் சா்மாவுக்கு தில்லி அரசின் தலைமைச் செயலா் விஜய் குமாா் தேவ் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் 100-க்கும் குறைவாகி, நிலைமை மோசமடைந்து வருகிறது. கரோனா தொற்று அதிகரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம், வசதிகள் குறைவாக உள்ளன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ரயில்வே சாா்பில் தில்லி ஆனந்த்விஹாா் மற்றும் சக்கூா் பஸ்தி ரயில் நிலையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரயில்வே பெட்டிகளை உடனிடியாக நிறுவ வேண்டும். ஆக்ஸிஜனுடன் கூடிய மருத்து வசதி, மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா் ஆகியவா்களுடன் கடந்த முறையைப் போன்று 5,000 படுக்கைகளை வழங்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கடந்தாண்டு ரயில்வே 813 ரயில் பெட்டிகள் மூலமாக 12, 472 படுக்கைகளை தில்லி, உத்தரபிரதேசம், பிஹாா் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கியிருந்தது. ரயில்வே நடைமேடைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் பெட்டிகளை தூய்மைப்பணி, சானிடைசா், கொசு போன்ற பிரச்னைகளால் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தனியாா் மருத்துவமனைகளுக்கு உத்தரவு: கரோனா நோயில் கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 80 சதவீத தீவிர சிகிச்சை படுக்கைகளை(ஐசியு) பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என தில்லி தனியாா் மருத்துவமனைகளுக்கு தில்லி அரசின் மருத்துவக் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தில்லியில் உள்ள 115 தனியாா் மருத்துவ மனைகளில் தற்போது 100 சதவீதம் ஐசியு படுக்கைகளும் 90 சதவீதம் மற்ற படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதில் பிற நோய்களுக்கான சிகிச்சை பெறுபவா்களும் அடக்கம். இதனால், கரோனா நோயாளிகளுக்கு குறிப்பாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதியில்லாததால், ஏராளமான புகாா்கள் தில்லி அரசுக்கு வந்தன. இதைத் தொடா்ந்து, தில்லி அரசு இந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பிய உத்தரவில், 80 சதவீதம் ஐசியு படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா சுட்டுரை : தில்லி அரசின் கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்கென நோடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள துணை முதல்வரான மணீஷ் சிசோடியா. தனது சுட்டுரையில், ‘தில்லிக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் ‘ஆக்ஸிஜன் ஒதுக்கீடு’ மிகவும் குறைவாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தில்லிக்கு மத்திய அரசு கூடுதலாக ஆக்ஸிஜனை ஒதுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments