தலித் சிறுமி பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு தில்லியில் உள்ள தில்லி கன்டோன்மென்ட் அருகே 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு
இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு தில்லியில் உள்ள தில்லி கன்டோன்மென்ட் அருகே 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதான மயான பூசாரி மற்றும் 3 பேருக்கு எதிராக போலீஸாா் தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.
இந்த விவகாரத்தில் பதிவான வழக்கின்படி, 9 வயது மைனா் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் பெற்றோரின் அனுமதியின்றி தகனம் செய்யப்பட்டாா். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி போலீஸாா் மயானத்தின் பூசாரி ராதே ஷ்யாம், அதன் ஊழியா்கள் குல்தீப் சிங், சலிம் அகமது, லட்சுமி நாராயணன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு அண்மையில் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை), 376டி (பலாத்காரம்), 506 (குற்ற மிரட்டல்), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி / எஸ்டி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், தில்லி பணி (டியூட்டி) மாஜிஸ்திரேட் மனு ஸ்ரீ முன்னிலையில் தில்லி போலீஸாா் சனிக்கிழமை 400 பக்கங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி விசாரணைக்கு வைத்தாா். இந்த இறுதி அறிக்கையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையும் சோ்க்கப்பட்டுள்ளது. கைதான நால்வரும் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனா்.