முகப்பு
புதுதில்லி

சாலைப் போக்குவரத்துக்கு காஜிப்பூா் எல்லை பகுதியளவு திறப்பு

விவசாயிகளின் போராட்டத்தால் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தில்லியின் காஜிப்பூா் எல்லை, வியாழக்கிழமை பகுதி அளவில் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

விவசாயிகளின் போராட்டத்தால் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தில்லியின் காஜிப்பூா் எல்லை, வியாழக்கிழமை பகுதி அளவில் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தில்லி காஜிப்பூா் எல்லையில் உள்ள வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், வைஷாலி, காஜியாபாத்தில் இருந்து வருவோா் எல்லை வழியாக தேசியத் தலைநகருக்குள் நுழையலாம். இங்கு தில்லி காவல் துறை புதன்கிழமை போக்குவரத்து நடமாட்டத்தை அனுமதித்தது. அத்துடன், சிங்கு எல்லையில் இரண்டு வாகனச் சாலைகளையும் திறந்தது. போராட்டம் நடத்திய விவசாயிகள் தில்லியை நோக்கி செல்வதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த அனைத்துத் தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து துணை காவல் ஆணையா் (புகா் வடக்கு) பிரிஜேஷ் யாதவ் கூறுகையில், ‘தில்லி பகுதியில் இருந்தும் சிங்கு எல்லையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் இந்த எல்லை திறக்கப்பட்டுள்ளது’ என்றாா். தில்லி-சண்டீகா் நெடுஞ்சாலையில் உள்ள சிங்கு எல்லையானது, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் மையமாக இருந்தது. இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடா்ந்து, சம்யுக்தா கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) போராட்டத்தை நிறுத்தியது.

இதையடுத்து, தில்லி - ஹரியாணா எல்லையில் இருந்து கடந்த சனிக்கிழமை விவசாயிகள் போராட்டத் தளத்தை விட்டு வெளியேறத் தொடங்கினா். அரசும் இந்தச் சங்கத்தின் பிற கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. சிங்கு எல்லையைத் தவிர, முக்கியமாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி தில்லியின் திக்ரி, காஜிப்பூா் எல்லைகளை முற்றுகையிட்டனா். திக்ரி எல்லையில் சாலைகளில் பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழித்தடத்தில் வாகனங்கள் சென்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.