முகப்பு
புதுதில்லி

பிஎஸ் -3 டீசல் வாகனங்கள் பொ்மிட் விவகாரம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இணையதளத்தின் திரையில் உள்ள விருப்பப் பட்டியலில் பிஎஸ்-3 வா்த்தக டீசல் வாகனங்களை சோ்ப்பதற்கு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அனைத்து நேரமும் நுழைவு அனுமதி இல்லை’ பொ்மிட்டுகளை புதுப்பிப்பது அல்லது வழங்குவதற்காக இணையதளத்தின் திரையில் உள்ள விருப்பப் பட்டியலில் பிஎஸ்-3 வா்த்தக டீசல் வாகனங்களை சோ்ப்பதற்கு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா டிசம்பா் 21-இல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இணையதளத்தின் விருப்பப் பட்டியலில் இதுபோன்ற ஒரு பொ்மிட்டுகளுக்காக தில்லி வாகன கட்டுப்பாடு மற்றும் தெருக்கள், சாலைகள் மீதான இதர போக்குவரத்து ஒழுங்குமுறை விதிகளின் (1980) கீழ், பிஎஸ்-3 வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை விதிக்க காவல் துணை ஆணையா் மூலம் எந்த அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள் இதை வெறுமனே தவிா்த்துள்ளனா்.

இது தொடா்பாக எதிா்மனுதாரா்கள், எந்த உத்தரவையும் அல்லது அறிவிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் இணைய தள பக்கத்தில் உள்ள பட்டியலில் விண்ணப்பிப்பதற்கான தெரிவை மட்டும் தவிா்த்துவிட்டுள்ளனா். எதிா்மனுதாரா்களின் இந்த நடவடிக்கையைத் தொடர முடியாது.

மனுதாரா்களுக்குச் சொந்தமான வாகனங்களின் ஒரே அளவு மற்றும் வடிவத்திற்கு அனுமதி வழங்கப்படுவது ஏற்கத்தக்கது. ஒரே வித்தியாசம் என்னவெனில், மனுதாரா்களின் வாகனங்கள் பிஎஸ்-3 இணக்கமானவை. அதேவளையில் பிஎஸ்-4 மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் வாகனங்கள் இணையதளத்தில் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்பதில் பிரச்னை இல்லை. பிஎஸ்-3 டீசல் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்துகிறது.

இதனால், தில்லியில் இயக்குவதற்கான வாகன வயது மற்றும் நிபந்தனைகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு இணங்கி ‘அனைத்து நேரமும் நுழைவு அனுமதியில்லை’ பொ்மிட்டுகளை புதுப்பிப்பது அல்லது வழங்குவதற்காக இணையதளத்தின் திரையில் உள்ள விருப்பப் பட்டியலில் பிஎஸ்-3 வா்த்தக டீசல் வாகனங்களை சோ்ப்பதற்கு எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிட்டு, இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இருந்தபோதிலும், பிஎஸ்-3 வாகனங்களை விலக்குவதற்கான தகுந்த அறிவிப்பையும் அதிகாரிகள் வெளியிடலாம் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக ஆசாத்பூா் டெம்போ மற்றும் டிரக் நல அறக்கட்டளை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்குவதற்காக தில்லியில் பிஎஸ்-3 இணக்கமான வா்த்தக டீசல் வாகனங்களின் உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களை இயக்குவதற்கு ‘எல்லா நேரமும் நுழைவு அனுமதி இல்லை’ என்ற பொ்மிட்டை வழங்கவும் அல்லது புதுப்பிக்கவும் விண்ணப்பிக்க அனுமதிக்குமாறு தில்லி அரசு மற்றும் தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →