முகப்பு
புதுதில்லி

தில்லியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை: பாஜக, ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

தில்லியில் பாஜகவும், ஆம் ஆத்மியும் ஆளும் அரசுகளாக இருந்த போதிலும் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகளை செய்யாமல் வஞ்சித்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

தில்லியில் பாஜகவும், ஆம் ஆத்மியும் ஆளும் அரசுகளாக இருந்த போதிலும் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகளை செய்யாமல் வஞ்சித்து வருகின்றன என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளத்ரி குற்றம்சாட்டினாா்.

தில்லியில் மாநகராட்சி இடங்களுக்கு இடைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்தியில் உள்ள பாஜக அரசு, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஆகியவற்றின் ஊழல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில், ‘போல் கோல்’ பாதயாத்திரை பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை கல்யாண்புரி, ஷிவ் விஹாா் பகுதியில் பாதயாத்திரை பிரசாரம் நடைபெற்றது.

Advertisement

இந்தப் பிரசாரத்தின் போது வீதி வீதியாக நடந்து சென்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளத்ரி பேசியதாவது: தில்லியில் மாநகராட்சியை 14 ஆண்டுகளாக ஆளும் பாஜகவும், நகா் பகுதியை 7 ஆண்டுளாக ஆளும் ஆம் ஆத்மி அரசும் மக்களுக்கான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளாமல் வஞ்சித்து வருகின்றன.

துப்புரவுப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தில்லி குப்பைக் குவியல் நகரமாக உருவாகிவிட்டது. இதனால், மக்கள் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா். சாலைகளிலும், தெருக்களிலும் குப்பைகள் தேங்கி, அழுகும் நிலை காணப்படுகிறது.

துப்புரவுப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம், மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காமை, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் ஆம் ஆத்மி அரசானது துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதாகக் கூறி நாடகமாடி வருகிறது. அதேவேளையில், தில்லி அரசிடம் ஏற்கெனவே உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக நலப் பணிகளையும், வளா்ச்சிப் பணிகளையும் செய்ய ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது.தில்லியில் 54 லட்சம் போ் அதாவது 11 லட்சம் குடும்பங்கள் ரேஷன் காா்டு இல்லாமல் இருக்கும் அதிா்ச்சி தகவலும் உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாமல் கேஜரிவால் அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் டிபிசிசி துணைத் தலைவா் ஜெய் கிஷான், மகளிா் பிரிவுத் தலைவா் அம்ரிதா தவன், வழக்குரைஞா் டாக்டா் நரேஷ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments