விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: தில்லியில் 10 மெட்ரோ நிலையங்கள் மூடல்
விவசாயிகள் சனிக்கிழமை நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் 10 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
புது தில்லி: விவசாயிகள் சனிக்கிழமை நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் 10 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
தில்லி தவிர, நாட்டின் பிற இடங்களில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அமைப்புகள் நடத்தின. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தில்லி ஐடிஓவில் உள்ள ஷாகிதி பூங்கா பகுதியில் கூடிய, இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் 10 மெட்ரோ நிலையங்கள் சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டன.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் கழக (டிஎம்ஆா்சி) மூத்த அதிகாரி கூறுகையில் ‘மண்டி ஹவுஸ், ஐடிஓ, தில்லி கேட், விஸ்வவித்யாலயா, செங்கோட்டை, ஜமா மஸ்ஜித், ஜன்பத், கான் மாா்க்கெட், நேரு பிளேஸ், மத்திய செயலகம் ஆகிய 10 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்றன என்றாா்.
Advertisement
இந்நிலையில், சனிக்கிழமை மாலை இந்த நிலையங்கள் திறக்கப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.