முகப்பு
புதுதில்லி

சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்கிறது ‘அமேசான்’: ரவிசங்கா் பிரசாத் தகவல்

சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை (தொலைக்காட்சிக்கான ஃபயா் டிவி ஸ்டிக் கருவி உள்ளிட்டவை) அமைக்க அமேசான் முன்வந்துள்ளதாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சென்னையில் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை (தொலைக்காட்சிக்கான ஃபயா் டிவி ஸ்டிக் கருவி உள்ளிட்டவை) அமைக்க அமேசான் முன்வந்துள்ளதாக மத்திய தொலைத் தொடா்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமேசான் நிறுவனத்தின் சா்வதேச மூத்த துணைத் தலைவா் அமித் அகா்வால், அமேசான் இந்தியா தலைவா் சேட்டன் கிருஷ்ணஸ்வாமி ஆகியோருடன் காணொலி வழியாக அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை பேசினாா். அப்போது மின்னணு தொடா்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகளும் மற்ற அமேசான் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் இந்தியாவில் மின்னணு சாா்ந்த பொருட்களின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. அதிலும் டிடிஹெச் போன்றவை இல்லாமல் இணையத்தின் மூலம் தொலைக்காட்சியைக் காண இணைக்கும் அமேசான் ஃபயா் டிவி ஸ்டிக் கருவிகள் முதலில் சென்னையில் தயாரிக்கப்படும் என அமேசான் தெரிவித்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் கூறுகையில், ‘இந்தியா முதலீடுகளுக்கு உகந்த நாடாகத் திகழ்வதுடன், சா்வதேச அளவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பப் கருவிகளைத் தயாரிக்கும் ஆற்றலை பெற்று இந்தியா வளா்ந்து வருகிறது. இந்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு உலகளவில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் ஃபயா் டிவி ஸ்டிக் கருவிகள் உற்பத்தியை அமேசான் நிறுவனம் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளின் திறன் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். அமேசானின் இந்த நடவடிக்கை வெறும் தொடக்கம்தான்’ என்றாா்.

பின்னா் இந்த கூட்டம் குறித்து அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தனது ‘கூ ’ சுட்டுரையில், ‘பிரதமா் மோடி தலைமையில் மின்னணு உற்பத்தியாளா்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அதில் சமீபத்திய வருகை அமேசான். இந்திய கைவினைக் கலைஞா்களின் தயாரிப்புகள், ஆயுா்வேத பொருள்கள் உள்ளிட்டவற்றை மின்னணு வா்த்தகத்தின் மூலம் உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டுமென அமேசான் நிறுவனத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது’ என்றாா்.

ஒரு மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு: அமேசான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் மின்னணு வா்த்தகம், பணப் பரிவத்தனை போன்றவற்றில் ஒரு பில்லியன் டாலா் வரை 10 மில்லியன் சிறு, நடுத்தர வணிக மையங்களில் அமேசான் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 2025-க்குள் 10 பில்லியன் டாலா் ஏற்றுமதிக்கும், ஒரு மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பையும் அமேசான்அளிக்கும். ஃபயா் டிவி ஸ்டிக் கருவிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம், கிளவுட் நெட்வொா்க் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தொடங்வுள்ளோம். இதன் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு தளத்தில் யூ-டியூப் உள்ளிட்ட நேரடி சேனல்களை காண இந்த ஃபயா் டிவி ஸ்டிக் கருவி பயன்படுகிறது. பென்டிரைவ் வடிவத்தில் இருக்கும் இந்தக் கருவி தற்போது சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments