அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?
மத்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி அமெரிக்கா சென்றுள்ளது குறித்து...
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செவ்வாய்க்கிழமை (ஏப். 7) அன்று அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்த 3 நாள் பயணத்தில் அவர் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தத்தையும், அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் இந்திய அரசு வரவேற்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், மத்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
மேலும், வரும் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதனால், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் அமெரிக்க பயணம் அதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.