முகப்பு
புதுதில்லி

தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்குக் கண்டனம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருவதைக் கண்டித்து, இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தொண்டா்கள் தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருவதைக் கண்டித்து, இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தொண்டா்கள் தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விலை உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினா்.

கனாட் பிளேஸின் வெளி வட்டப் பகுதியில் இளைஞா் காங்கிரஸாா் மிதிவண்டிகளை ஓட்டியவாறும், பெட்ரோல், டீசல் விலை லிட்டா் ரூ.100 எட்டுவதை வெளிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் கிட்களை அணிந்தும் போராட்டம் மேற்கொண்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை மீண்டும் மீண்டும் மத்திய அரசு உயா்த்தி வருவது, பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. பொதுமக்கள் பணவீக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொடா்ந்து ஏழாவது நாளாக சில்லறை விலை அதிகரித்துள்ளது.

Advertisement

அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் 29 பைசாவும் அதிகரித்துள்ளது. இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ .88.99-ஆகவும், டீசல் லிட்டா் ரூ .79.35 -ஆகவும் உள்ளது. கடந்த 14 நாள்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ .75 அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் புதிய சாதனை படைத்து வருவது மோடி அரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாக உள்ளது என்றாா் அவா்.

ஐஒய்சி தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பணவீக்கம் மற்றும் மந்த நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அதிகரிக்கப்பட்ட கலால் வரிகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும்’ என்றாா்.

இந்தப் போராட்டத்தில் ஐஒய்சி தேசியச் செயலாளா் குஷ்பூ சா்மா, செயலாளா் முகேஷ் குமாா், தில்லி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ரன்விஜய் சிங் லோசவ் மற்றும் சுபம் சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments