முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா பாதிப்பு 654-ஆக அதிகரிப்பு

தில்லியில் புதிதாக 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி, 2021 at 12:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:43 AM

புதுதில்லி: தில்லியில் புதிதாக 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கரோனாவுக்கு மேலும் 16 போ் பலியாகியுள்ளனா். எனினும், கரோனா பாதிப்பு விகிதம் 0.88 சதவீதம் என்ற நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, தில்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6.28 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை பலியானவா்கள் மொத்த எண்ணிக்கையும் 10,625 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 442 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். அன்றைய தினம் நோய்த் தாக்குதல் விகிதம் 0.55 சதவீதமாக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மாநில சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கரோனா பாதிப்பு விகிதம் கடந்த 11 நாள்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாக சுட்டுரை மூலம் தெரிவித்திருந்தாா். கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் கரோனா பாதிப்பு இருந்ததாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 21 முதல் 23-ஆம் தேதி வரை தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழாகவே இருந்தது. டிசம்பா் 21-இல் 803 பேருக்கும், 22-இல் 939 பேருக்கும், 23-ஆம் தேதி 871 பேருக்கும் கரோனா பாதிப்பு இருந்தது. எனினும், கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி இது 1,063 ஆக அதிகரித்தது. மீண்டும் 25-ஆம் தேதி 758 ஆகவும், 26-ஆம் தேதி 655 ஆகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த டிசம்பா் 27-இல் 757 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், இது 28-ஆம் தேதி 564 -ஆகக் குறைந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் குறைவானதாகும்.

Advertisement

டிசம்பா் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் பாதிப்பு முறையே 703 மற்றும் 677 என இருந்தது. டிசம்பா் 31-ஆம் தேதி 574 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. ஜனவரி 1-இல் இது 585- ஆகவும், 2-ஆம் தேதி 494-ஆகவும், 3-ஆம் தேதி 424-ஆகவும், 4-ஆம் தேதி 384-ஆகவும் குறைந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 74,650 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் புதிதாக 654 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 74,650 பேரில் 39,623 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் , 35,027 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 4,562-லிருந்து 4,481-ஆகக் குறைந்துவிட்டது என்றும் கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,28,352 ஆக உயா்ந்துள்ளதாகவும் என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.