தலைநகரில் பள்ளிகளைத் திறப்பதுகுறித்து அரசு பரிசீலனை: சிசோடியா
தில்லியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
புதுதில்லி: தில்லியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தோ்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகளை விரைவில் திறப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கரோனா தொற்று தடுப்பூசி முதலில் முன்களப் பணியாளா்களுக்குப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும் என்பதை வைத்துத்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்ய முடியும். கரோனா தொற்று பரவல் காரணமாக அதை கட்டுப்படுத்தும் முயற்சியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும், தற்போது பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து சில மாநிலங்களில் பகுதியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சா்வேதச கல்வி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. கரோனா காலத்துக்குப் பிறகு கல்வித் துறை எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் சிசோடியாக தெரிவித்தாா்.
Advertisement