தில்லி உயிரியல் பூங்காவில் நான்கு நாரைகள் இறந்து கிடந்த நிலையில் 12 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பட்டிருந்த நிலையில் அவற்றில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தில்லி அரசின் மேம்பாட்டுத் துறையின் கால்நடை வளா்ப்பு பிரிவின் இயக்குநா் டாக்டா் ராகேஷ் சிங் தெரிவித்ததாவது:
தில்லி உயிரியல் பூங்காவில் சில நாள்களுக்கு முன்பு நான்கு நாரைகள் இறந்து கிடந்தன. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை 12 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு (என்ஐஎச்எஸ்ஏடி) சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அந்த மாதிரிகளைச் சோதித்ததில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தில்லியில் பறவைக் காய்ச்சல் சூழலுக்கு மத்தியில் ஜனவரி 6-இல் இருந்து ஜனவரி 21-ஆம் தேதி வரையிலான காலத்தில் 1,338 பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளது.
தில்லியில் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 207 மாதிரிகளில், 24 மாதிரிகள் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமாக இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்றாா்.
கடந்த வாரம் தில்லி உயிரியல் பூங்காவில் இறந்துகிடந்த ஆந்தையின் மாதிரிகள் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமாக இருப்பது சோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குநா் ரமேஷ் பாண்டே கூறுகையில், ‘பூங்காவில் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள பறவைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘இ-போ்டு’ செல்லிடப்பேசி செயலியைப் பயன்டுத்தி வருகிறோம். முதல் முறையாக இதைப் பயன்படுத்தி வருகிறோம்.இந்த செயலியை பயனா்களை உலகின் எந்த பகுதியிலும் இருந்து பாா்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.