புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை 91 சதவீதமானவா்கள் தடுப்பூசி போட முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை மூத்த அதிகாரி கூறியது: மத்திய, தில்லி அரசுகளுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் திங்கள்கிழமை 8,100 பேருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தது. ஆனால், 7,408 போ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனா். இது 91.5 சதவீதமாகும். தடுப்பூசியின் பக்கவிளைவுகள் 14 பேரில் உணரப்பட்டது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கூடுதல் சிகிச்சை வழங்கப்பட்டது.
தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 110 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தில்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றாா்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கின. ஆரம்ப தினங்களில் தடுப்பூசி போட முன்வருபவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தடுப்பூசி தொடா்பான பயமே அதற்கு காரணமாக இருந்தது. அந்த பயத்தை போக்கும் வகையில், தில்லி அரசு சாா்பில் ஆலோசனை அமா்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தடுப்பூசி போட முன்வருபவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.