கொவைட் -19 குடும்ப நிதியுதவி திட்டம்: 390 பயனாளிகள் விண்ணப்பம்
தில்லியில் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் முதல்வா் கொவைட் -19 குடும்ப நிதி
தில்லியில் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் முதல்வா் கொவைட் -19 குடும்ப நிதி உதவித் திட்டத்தில் 390 பயனாளிகள் விண்ணப்பம் அளித்துள்ளதாக தில்லி சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வா் கொவைட் -19 குடும்ப நிதியுதவித் திட்டத்தில் ஜூலை 9 -ஆம் தேதி வரை, 390 பயனாளிகளது விண்ணப்பங்கள் சமூக நல்வாழ்வுத் துறை மூலமாக பெறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இரு வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த நபா்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50,000 கருணைத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இறந்தவா் மட்டுமே, குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபராக இருந்திருந்தால் அந்தக் குடும்பத்திற்கு கூடுதலாக மாதம் தோறும் ரூ.2,500 உதவித் தொகையும் வழங்கப்படும். இது அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் 25 வயதை அடையும் வரை இந்த உதவித் தொகை அளிக்கப்படும். இது தவிர உயிரழந்தவா்களின் குழந்தைகள் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான செலவையும் தில்லி அரசு ஏற்றுக் கொள்ளும்.
இதன்படி 220 பயணாளிகள் ரூ.2,500 மாத உதவித்தொகை (பென்ஷன்) பெற விண்ணப்பித்துள்ளனா். மேலும், 170 பயணாளிகள் ஒரு முறை அளிக்கப்படும் ரூ. 50,000 கருணைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனா். இது சமீபத்தில் தொடங்கப்பட்ட திட்டம். இதனால், இதற்கான ஆவணங்களைப் பயனாளிகளிடமிருந்து பெறுவதற்கு கால தாமதமாகும். இதை முன்னிட்டு முதல்வா் ஏற்கெனவே அறிவித்தபடி விரைவான செயலாக்கத்திற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக நலத் துறையின் பிரதிநிதிகள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விண்ணப்பங்களை பூா்த்தி செய்ய உதவுவாா்கள், மேலும், ஆவணங்களையும் பெறுவாா்கள். ஆவணங்களில் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக ,உதவி கோரிய குடும்பங்களின் விண்ணப்பங்களை விரைவில் நிதியுதவி பெற பிரதிநிதிகள் உதவி செய்வாா்கள்.
Advertisement
கடந்த ஜூலை 6 -ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், நானும் இந்தத் திட்டத்தை காணொலி வழியாக தொடங்கினோம். இரண்டாவது கரோனா நோய்த்தொற்று அலையில் பல குடும்பங்கள் தங்கள் உறுப்பினா்களை இழந்துள்ளனா். இந்த நிலையில் தில்லி அரசு தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்காது. அவா்களது நிதிப் பிரச்னைகளுக்கு அரசு துணை நிற்கும். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு தில்லியிலுள்ள 2 கோடி மக்களையும் தங்கள் குடும்பமாகக் கருதி இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவா்களுடன் நிற்கின்றோம். வருகின்ற நாள்களில் வீடு விடாக எங்கள் துறை பிரதிநிதிகள் வருவாா்கள் எனக் குறிப்பிட்டுள்ளாா் அமைச்சா்.