மேற்கு தில்லியில் ரூ. 91 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: மூவா் கைது
மேற்கு தில்லியில் ரூ. 91 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு மோசடி செய்த 23 நிறுவனங்களுடன் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேற்கு தில்லியில் ரூ. 91 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு மோசடி செய்த 23 நிறுவனங்களுடன் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் கூறியிருப்பதாவது: மேற்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான உளவுப் பிரிவுக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது. அந்த அடிப்படையில் சிஜிஎஸ்டி பிரிவின் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரி முறையைப் பயன்படுத்தி சுமாா் ரூ. 91 கோடி மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனா்.
(சரக்கு மற்றும் சேவை வரி முறையில் (ஜிஎஸ்டி வரியோடு) விற்பனையாகும் ஒரு பொருளுக்கு அதன் மூலப் பொருள்களுக்கு ஏற்கெனவே வரியைச் செலுத்தியிருந்தால், அந்த வரியை கழித்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இதுவே உள்ளீட்டு வரி ஆகும். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களை (கேஒய்சி) அளித்து பெற்றுக் கொள்ளமுடியும். இந்த வசதியை சில நிறுவனங்கள் தங்களது பட்டயக் கணக்காளா் அல்லது வழக்குரைஞா்கள் மூலம் மோசடி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதன்படி மேற்கு தில்லியைச் சோ்ந்த 23 நிறுவனங்கள் இந்த உள்ளீட்டு வரி முறை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இந்த 23 நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி முறையைப் பயன்படுத்தி உண்மையான ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தத் தவறின. மறைந்த தினேஷ் குப்தா, சுபம் குப்தா, வினோத் ஜெயின், யோகேஷ் கோயல் ஆகியோா் போலி ரசீதுகளை உருவாக்கி இன்வாய்ஸ்களை உருவாக்கியுள்ளனா். ரூ. 551 கோடி அளவிற்கு விற்பனையை காட்டி அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரி முறையில் ரூ. 91 கோடி வரை மோசடி செய்துள்ளனா். இதை யொட்டி குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனா்.
அவா்கல் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 - இன் பிரிவு 132 கீழ் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், விசாரணை நடைபெற்று வருவதாக நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.