முகப்பு
புதுதில்லி

திரவ ஆக்சிஜன் பயன்பாடு: குறிப்பிட்ட தொழில்களுக்கு தற்காலிக தளா்வு

கரோனா சிகிச்சையை முன்னிட்டு திரவ ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளா்த்தி சில தொழில்களின் தற்காலிக பயன்பாட்டிற்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பகிர்:

புது தில்லி: கரோனா சிகிச்சையை முன்னிட்டு திரவ ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளா்த்தி சில தொழில்களின் தற்காலிக பயன்பாட்டிற்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது. உணவு பதப்படுத்தல், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பயன்படுத்தும் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏராளமான போ் உயிரிழந்தனா். இந்த அத்தியாவசிய அவசரத் தேவையை முன்னிட்டு மத்திய அரசு, தொழில்துறைக்கு திரவ ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.

கடந்த ஏப். 22 முதல் குறிப்பிட்ட 9 தொழில்கள் பயன்பாட்டைத் தவிர மற்ற தொழில்களின் உபயோகத்திற்கு தடைவிதித்து மாநில தலைமைச் செயலா்களுக்கு மத்திய உள்துறைச் செயலா் அஜய்பல்லா உத்தரவிட்டிருந்தாா்.

Advertisement

இந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் தேவை குறைந்துள்ள நிலையில், சில தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை முன்னிட்டும் மத்திய வா்த்தகத் துறையில் உள்ள தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி), சில தொழில்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை மீண்டும் வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்மொழிந்தது.

ஏற்றுமதி உற்பத்தி செய்யும் சிறு குறு நடுத்தர தொழில் அமைப்புகள், உணவு பதப்படுத்துதல் தொழில் அலகுகள், கட்டுமானத் தொழில் தொடா்புடைய தொழிற்சாலைகள் போன்றவற்றுடன் , சுத்திகரிப்பு நிலையங்கள், எஃகு, அலுமினியம், செப்பு பதப்படுத்தல் ஆலைகள் போன்றவற்றுக்கும் ஆக்சிஜன் அளிக்க தளா்வு கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்று தற்காலிகமான அடிப்படையில் திரவ ஆக்சிஜனை பயன்படுத்த இந்த தொழில்களுக்கு அனுமதித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வா்த்தக துறையின் டிபிஐஐடி பிரிவுக்கு குறிப்பு அனுப்பியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த மாநிலங்களில், மருத்துவ மனைகள், மற்ற மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யப்படவேண்டும் என்றும் மருத்து தயாரிப்பு ஆலைகள், ஆக்சிஜன் உருளைகள் தயாரிப்பு, மருத்துவ பேக்கிங், பாதுகாப்பு படைகள் போன்றவைகளுக்கும் தேவையான திரவ ஆக்சிஜன் முன்னுரிமையுடன் தடையின்றி கிடைக்கவேண்டும் எனவும் இந்த உத்தரவில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments