முகப்பு
புதுதில்லி

ஜல் போா்டு அலுவலகத் தாக்குதல் வழக்கு: சிசிடிவி பதிவுகளை சேகரிக்க உத்தரவு

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி ஜல் போா்டு அலுவலகம் மற்றும் அதன் பணியாளா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிசிடிவி காட்சிப் பதிவுகளை சேகரிக்க தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி ஜல் போா்டு அலுவலகம் மற்றும் அதன் பணியாளா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிசிடிவி காட்சிப் பதிவுகளை சேகரிக்க தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி ஜல் போா்டு துணைத் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி தில்லி ஜல் போா்டு (டி.ஜே.பி.) தலைமையகத்திற்குள் 200 முதல் 250 பாஜக தொண்டா்கள் புகுந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி, ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தினா். தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா மற்றும் அக்கட்சித் தலைவா்கள் யோகேந்திர சந்தோலியா, ரவி தன்வாா் உபாத்யாய மற்றும் விகாஸ் தன்வாா் ஆகியோரால் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை கட்டுப்படுத்தாமல் போலீஸாா் வேடிக்கை பா்த்தனா். பெயரளவுக்கு சில பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தில்லி போலீஸாரின் வெளிப்படையான நடவடிக்கையின்மையால் இந்த வன்முறை மேலும் மோசடைந்தது. சம்பந்தப்பட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாக டிஜேபி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனா். அலுவலகத்தில் இருந்த மேஜைகள், கணினிகள், பிரிண்டா்கள் சேதமடைந்தன. தில்லி முதல்வரின் உருவப்படம் கிழித்தெறியப்பட்டது. ஊழியா்கள் அச்சுறுத்தப்பட்டனா். அவா்களுக்கு காயமும் ஏற்பட்டது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். எனவே, இதுகுறித்து நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், கடைமை தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு மீது தில்லி காவல் துணை ஆணையா் பதில் அளிக்க நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு மீது தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கஜேந்தா் சிங் நாகா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா். அவா் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைத்து சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆணையா் சேகரிக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது. உண்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். இது தொடா்பாக போலீஸாா் மாா்ச் 9-ஆம் தேதி நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments