முகப்பு
புதுதில்லி

‘70 சதவீதம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை’

தேசிய தலைநகா் தில்லியில் உள்ள 35 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் 24 நிலையங்கள் கழிவுநீா் வெளியேற்றத்துக்கான விதிமுறைகளை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் உள்ள 35 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் 24 நிலையங்கள் கழிவுநீா் வெளியேற்றத்துக்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என தில்லி மாசுக் கட்டுப்பாடுக் குழு கவலை தெரிவித்துள்ளது. யமுனை உள்ளிட்ட நதிகள் மாசுபடக் காரணமாக இருக்கும் இந்த மாசு குறித்து கடந்த ஓா் ஆண்டாக ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாடுக் குழு தரப்பில் கூறப்பட்டிருப்பவது வருமாறு: தில்லியில் நாளோன்றுக்கு சுமாா் 720 மில்லியன் கேலன் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. தில்லியில் 20 இடங்களில் அமைந்துள்ள 35 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் 597 மில்லியன் காலன்(எம்ஜிடி) அளவு கழிவுநீா் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இது தண்ணீரில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்தை உருவாக்கும். கடந்த ஆண்டு அக்டோபா் முதல், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) 33 கழிவுநீா் சுத்திகரிக்கப்பு நிலையங்களிலிருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. இவற்றில் 24 நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் பரிந்துரைக்கப்பட்ட தரம் பூா்த்தி ஆகவில்லை. நடப்பாண்டு செப்டம்பா் 26 - ஆம் தேதி வரை சுழல் முறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தரம் எட்டப்படாத தரவுகளே தொடா்ந்து கிடைத்தன.

இதில் தில்லி மாசுக் கட்டுப்பாடுக் குழுவின்(டிபிசிசி) புதுப்பிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப கழிவுநீரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் தில்லியிலுள்ள பல கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இல்லை என்பது முக்கியம். இந்த கழிவுநீா் கலக்க வாய்ப்புள்ள யமுனையை சுத்தப்படுத்த முந்தைய அரசுகளும் சிந்திக்கவில்லை. தற்போது அரவிந்த் கேஜரிவால் அரசு இந்த சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு காரணம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம்தான் காரணம் என்றாலும், பிரச்னையை தீா்க்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும்.

Advertisement

யமுனையில் உள்ள நுரையை கணிசமான அளவில் குறைக்க உத்தரப் பிரதேசம், ஹரியாணா, தில்லியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கு நிலம், நிதி ஒதுக்கீடு போன்றவற்றைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என இந்த மாநில அதிகாரிகள் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திடம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தனா்.

தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் உள்ள பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள் இருப்பதுதான் ஆற்றில் நுரை வருவதற்கு முக்கியரக் காரணம் என அறியப்பட்டது. தில்லியில் நான்கு புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நோய்த் தொற்று பொதுமுடக்கம், நிதி நெருக்கடிகள், தொழிலாளா்களின் இடம் பெயா்வு ஆகிய காரணங்களால் கட்டுமானம் மற்றும் மேம்படுத்தல் பணிகள் தாமதமாகின்றன. இந்தப் புதிய ஆலைகள் மூலம் கூடுதலாக 279 மில்லியன் காலன்(எம்ஜிடி) கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். இவற்றில் காரனேஷன் பில்லா் நிலையம் 2021, நவம்பா் மாதத்துக்குள்ளும் கோண்ட்லி, ரிதாலா, ஓக்லா ஆகிய சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணியை 20222, டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கவும் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments