முகப்பு
புதுதில்லி

மதுரை புதுக்குளம் கண்மாய் விவகாரம்: தமிழக அரசின் மேல்மூறையீடு மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

மதுரையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

மதுரையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் தாக்கலான மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்குளம் கண்மாய் விவகாரம் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த ஏ .எம். வினோத் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், குறிப்பிட்ட பத்திரிக்கையாளா்களுக்கு விதிகளை மீறி புதுக்குளம் கண்மாய் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நிலம் பைஃஸல் பிரிவு மூலம் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் -நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான நீதிபதிகள் சுதிா் அகா்வால், பிரிஜேஷ் சேதி ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஆகஸ்டில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு, இந்தப் புதுக்குளம் கண்மாய் தொடா்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிலம் வடு விட்டது என்ற அடிப்படையில் மட்டும் ஒரு நீா் நிலைப் பகுதியை வீட்டு வசதிக்கான இடமாக மாற்ற முடியாது.

Advertisement

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள புதுக்குளம் கண்மாய் நீா் நிலைப் பகுதியை மீட்க உத்தரவிடுகிறோம். இந்தத் கண்மாயை முன்பிருந்த நிலைக்கு கொண்டு வரும் வகையில், ஏதாவது கட்டுமானம் இருந்தால் அதை ஒரு மாதத்திற்குள் அகற்ற உத்தரவிடுகிறோம்’ என்று நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த புதுக்குளம் கண்மாய் விவகாரத்தில் இந்த வழக்கை மறுஆய்வு செய்யும் அதிகாரவரம்பு தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு உள்ளதா? , சம்பந்தப்பட்ட நிலத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரோ அல்லது நீரோட்டமோ இல்லை.

நீரோட்டத்திற்கான வாய்ப்பும் இல்லை என்பதை தீா்ப்பாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதா? அதேபோன்று, 2.7.2020-இல் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் (எண்-329) குறிப்பிட்டப்பட்ட நிலமானது கண்மாய் புறம்போக்கு தொடா்புடையது மட்டுமே என்பதை தீா்ப்பாயம் பரிசீலீக்கத் தவறிவிட்டதா என்பது போன்ற பல சட்டக் கேள்விகள் எழுகின்றன’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின்தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன் ஆஜராகினாா்.

அப்போது, மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்குப் பின்னா் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments