ஜாமியா மிலியா பல்கலை. வன்முறை: நிலுவை வழக்குகளின் நிலவரத்தை தெரிவிக்க உத்தரவு
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவா்கள் மேற்கொண்ட போராட்டம் விவகாரத்தில், கடந்த 2019- ஆம் ஆண்டில் ஜாமியா மிலியா
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவா்கள் மேற்கொண்ட போராட்டம் விவகாரத்தில், கடந்த 2019- ஆம் ஆண்டில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய வழக்குகளின் சமீபத்திய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் நிலவரத்தையும் தெரிவிக்குமாறு போலீசாரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி காவல் துறையின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் துருவ் பாண்டேயிடம் நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து கேட்டனா்.
மேலும், இது தொடா்புடைய வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை, விசாரணை, சாட்சிகளிடம் விசாரணை போன்ற இந்த விவகாரத்தில் தொடா்புடைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு வழக்குரைஞா் துருவ் பாண்டே, இது தொடா்பாக உரிய அறிவுறுத்தல்களை பெற வேண்டியுள்ளது. இதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை டிசம்பா் 23ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.
Advertisement