அடித்த சிக்ஸர்களில் சில ஹைலைட்ஸ்! ஐபிஎல்-ஐ மேற்கோள் காட்டி ஸ்டாலின் பிரசாரம்!
அடிச்ச சிக்ஸர்களில் சில ஹைலைட்ஸ் இருக்கின்றன; ஐபிஎல்-ஐ மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டதைப் பற்றி..
அடித்த சிக்ஸர்களில் சில ஹைலைட்ஸ் இருக்கின்றன என ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மேற்கோள் காட்டி, திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
Advertisement
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்கள் அப்துல் வஹாஃப், அவைத் தலைவர் அப்பாவு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ரூபி மனோகரன், வி.பி. துரை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளை தாக்கிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக 2.0 ஆட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் தமிழகம் முழுவதும் தெரியும்.
ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும். தற்போது ஐபில் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் சிக்ஸர்கள் அடித்துப் பார்த்திருப்பீர்கள். அதில் சிலவற்றை ஹைலைட்ஸ்ஸாகப் பார்க்கலாம்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நமது தேர்தல் அறிக்கையில் நாம் அடித்த சிக்ஸர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
• முதல் சிக்ஸர் இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000-க்கு கூப்பன் வழங்கும் திட்டம். இந்த கூப்பனை வைத்து புதிய பொருளை வாங்கலாம் அல்லது பழையப் பொருளை மாற்றிக் கொடுத்துவிட்டு புதிய பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
• குழந்தைகளின் பசியை போக்கும் காலை உணவுத்திட்டத்தை 5 வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை உயர்த்தப்போகிறோம்.
• இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000-லிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப் போகிறோம்.
• 20 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெரும் வகையில் நவீன மின்சார பம்பு செட்டுகளை வழங்கப்போகிறோம்.
• புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000-லிருந்து ரூ. 1500 ஆக உயர்த்தப் போகிறோம்.
• உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் ரூ. 1500 உதவித்தொகையுடன் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்கப்போகிறோம்.
• முதியோர் உதவித்தொகை ரூ. 1500-லிருந்து ரூ. 2000 ஆக உயர்வு.
• மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு.
• மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.